Asianet News TamilAsianet News Tamil

காட்டுமிராண்டிகள் காலத்திற்கு மக்களை அழைத்து செல்கிறார் பிரதமர் மோடி..! ராகுல் காந்தி கடும் தாக்கு..!

congress president rahul gandhi criticize modi and bjp government
congress president rahul gandhi criticize modi and bjp government
Author
First Published Dec 16, 2017, 12:18 PM IST


வெறுப்புணர்வை வளர்த்து மக்களை பாஜக பிளவுபடுத்துவதாகவும் பாஜகவின் வெறுப்பு அரசியலை காங்கிரஸால் மட்டுமே எதிர்கொண்டு நிறுத்த முடியும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு பேசிய ராகுல் காந்தி, பாஜக மீதும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

நாட்டு மக்களுக்கு சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது. மத்திய அரசுக்கு எதிராக பேசுபவர்களின் குரல் நசுக்கப்படுகிறது. தற்போதைய இந்தியாவில் கருத்து சுதந்திரம் என்பதே கிடையாது. நாட்டிற்கான அனைத்து முடிவுகளையும் ஒருவரே(பிரதமர் மோடி) எடுக்கிறார். ஒரு தனிநபரின் கருத்துக்கு அனைவரும் செவிசாய்ப்பது என்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

தற்போதைய ஆட்சியாளர்கள்(பாஜக) தங்களது பலத்தால் தான் வெற்றி பெறுகிறார்களே தவிர மக்களுக்கு நன்மை செய்து வெற்றி பெறவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு இந்தியருக்காகவும் குரல் கொடுக்கும். நாடு முழுவதும் உள்ள மக்களை சந்தித்து அவர்களின் தேவையை புரிந்துகொண்டுள்ளேன்.

மக்களிடம் வெறுப்புணர்வை வளர்த்து அதன்மூலம் மக்களை பாஜக பிளவுபடுத்த நினைக்கிறது. பாஜக வெறுப்புணர்வை வளர்க்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ அன்பை அடிப்படையாக கொண்டு மக்களை இணைக்க நினைக்கிறது. பாஜகவின் வெறுப்பு அரசியலை காங்கிரஸால் மட்டுமே எதிர்கொண்டு நிறுத்த முடியும்.

இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் குழப்பம் நீடிக்கிறது. தங்களுக்கு பிடித்த உணவை சாப்பிடுபவர்கள் கொலை செய்யப்படும் அவலம் தற்போது இந்தியாவில் உள்ளது. 

இந்தியாவை காங்கிரஸ் கட்சி 21ம் நூற்றாண்டுக்கு அழைத்து சென்றது. ஆனால், பிரதமர் மோடியோ, காட்டுமிராண்டிகள் காலத்திற்கு அழைத்து செல்கிறார். பாஜகவினரையும் எனது சகோதரர்களாகவே பார்க்கிறேன். ஆனால் பாஜகவின் வெறுப்பு அரசியலை ஏற்றுக்கொள்ள முடியாது.

நான் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன். காங்கிரஸ் கட்சியின் தலைவராக நான் பொறுப்பேற்றாலும் மூத்த நிர்வாகிகளின் நிழலையே பின்பற்றுவேன் என ராகுல் காந்தி பேசினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios