தொடங்கியது அதிமுக, காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் - முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
அதிமுக ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதிமுக பொது செயலாளர் சசிகலா, முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இன்று காலை நடந்த ஆலோசனை கூட்டத்தில், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து இன்று மாலை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது. இதில், மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட மூர்த்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிப்பது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் விவசாயிகள் தற்கொலையை தடுப்பது, கள்ளப்பணம் ஒழிப்பதாக கூறி, செல்லாத நோட்டு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.