தென்னை, கிணறு, நிலம் என அனைத்திற்கும் இழப்பீடு! வதந்திகளை மட்டும் நம்பாதீங்க...! ஆட்சியர் ரோகிணி
சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தில் கையகப்படுத்தும் நிலத்துக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி இன்று
தெரிவித்துள்ளார். மேலும் பசுமை வழிச்சாலை குறித்த வதந்திகளை நம்ம வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை - சேலம் இடையே ரூ.10 கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான விவசாய நிலங்களை தமிழக
அரசு கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த திட்டத்தினை எதிர்த்து பொதுமக்கள், சமூக நல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த திட்டத்தினை செயல்படுத்த தீவிர
முனைப்புடன் தமிழக அரசு செயல்படடு வருகிறது. சாலை அமைப்பதற்கான அளவீடு பணிகள் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்து வரும் வேளையில், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 50 வருடங்களுக்கு மேல் வாழ்ந்த
நிலங்களை விட்டு எங்களை வெளியேற்றுவதா? என்று அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். அவர்கள் உச்சகட்டமாக எங்களை உயிரை பறித்த பிறகு எட்டு
வழிச்சாலையை அமைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தும் நிலத்திற்கு எவ்வளவு இழப்பீடு தொகை வழங்கப்படும என்பது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் ரோகிணி
இன்று வெளியிட்டார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலத்தில் பசுமை வழிச்சாலை 38 கி.மீ தூரத்திற்கு வரவுள்ளது. நில கையகப்படுத்தும்
சட்டத்தின்படி, இதில் உள்ளடங்கும் நிலங்களுக்கு மட்டுமின்றி, கிணறு மற்றும் மரங்களுக்கும் இழப்பீடு தரப்படும். ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு குறைந்தபட்சம்
ரூ.21.5 லட்சம் மற்றும் அதிகபட்சமாக ரூ.9.04 கோடி வரையில் வழங்கப்படும் என்றார்.
ஒரு முதிர்ச்சி அடைந்த தென்னை மரத்திற்கு ரூ.50,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.40,000 மாக இருந்த இதன்விலை தற்போது ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் தென்னை மரங்கள் இருந்தால் நிலத்திற்கும், நிலத்தில் உள்ள கிணறு, தென்னை மரத்திற்கும் என அனைத்திற்கும் இழப்பீடு கொடுக்கப்படும் என்று கூறினார்.
இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தின்கீழ் அவர்களுக்கு நிலங்கள் வழங்கப்படும். அரசு திட்டத்தின்கீழ் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். கடைகள், சிறிய
தொழில் செய்யும் நிறுவனங்கள் போன்று இருந்தால் பொருட்களை இடமாற்றம் செய்ய ரூ.50,000 வழங்கப்படும். எனவே விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும்
இந்த திட்டத்தினால் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் திட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் யாரும் போராட்டம் நடத்தவில்லை என்றும் நிலத்திற்கு வழங்கும்
இழப்பீடு தொகை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்.