தேசப்பிதா காந்தியோடு மோடியை ஒப்பிடுவதா? இது கடவுளுக்கு இணையாக அரக்கனை ஒப்பீடுவதற்கு சமம்.. கொதிக்கும் மநீம.!
இந்திய தேசம் மட்டுமல்ல உலகமே ஏற்றுக் கொண்டு கடைபிடிக்க முயற்சி செய்து வரும் அகிம்சையை தந்த நம் தேசப்பிதா காந்தியாரோடு நரேந்திரமோடி அவர்களை ஒப்பிடுவது என்பது கடவுளுக்கு இணையாக அரக்கனை ஒன்றாக வைத்து ஒப்பீடு செய்வதற்கு சமம்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பிரதமர் மோடியை இந்தியாவின் தேசத்தந்தை என புகழ்ந்து தேசப்பிதா மகாத்மா காந்தியோடு ஒப்பிடும் வகையில் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ் பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவின் தேசத்தந்தை என புகழ்ந்து தேசப்பிதா மகாத்மா காந்தியோடு ஒப்பிடும் வகையில் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். கடந்த சில மாதங்களுக்கு முன் மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆதரவோடு கலகம் செய்து ஆட்சியைப் பிடித்து புறவாசல் வழியே துணை முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் தனது நன்றிக் கடனை தீர்க்க மனைவி அம்ருதா பட்னாவிஸ் மூலம் மோடி அவர்களை புகழ்ந்து பாட வேண்டுமானால் பாஜகவின் அரசவை புலவராகி தொடர்ந்து அவரது புகழ் பாடட்டும்.
ஆனால் நம் இந்திய தேசம் மட்டுமல்ல உலகமே ஏற்றுக் கொண்டு கடைபிடிக்க முயற்சி செய்து வரும் அகிம்சையை தந்த நம் தேசப்பிதா காந்தியாரோடு நரேந்திரமோடி அவர்களை ஒப்பிடுவது என்பது கடவுளுக்கு இணையாக அரக்கனை ஒன்றாக வைத்து ஒப்பீடு செய்வதற்கு சமம் என்பதால் இது போன்ற கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சுதந்திர இந்தியாவில் வெறுப்பு அரசியலை உருவாக்கி, மதவாத அரசியல் செய்து, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகி வருவதோடு, சிறு, குறு, நடுத்தர தொழில்களையெல்லாம் ஒழித்துக்கட்டி, கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளித்து, அவர்களின் பல லட்சம் கோடி கடனையெல்லாம் வாராக்கடன்களாக தள்ளுபடி செய்து, விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்து, தேசத்தில் வேலையில்லா திண்டாட்டங்களை உருவாக்கி, சுயவிளம்பரங்களுக்கு மட்டும் அரசின் சார்பில் பலநூறு கோடி ரூபாய் செலவிட்டு ஆட்சி நடத்தும் நரேந்திரமோடி அவர்களை 21ம் நூற்றாண்டில் "சுயவிளம்பரத்தின் தந்தை," "கார்ப்பரேட்டுகளின் காவலன்," "வெறுப்பு அரசியலின் தந்தை" என்று வேண்டுமானால் அழைக்கலாம். அப்படி அழைக்க திருமதி. அம்ருதா பட்னாவிஸ் அவர்களும், அவரை புகழந்து தள்ள நினைப்பவர்களும் பரிசீலனை செய்யலாம் என பொன்னுசாமி கூறியுள்ளார்.