தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் என்று வேலை செய்துகொண்டிருக்கிறது அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார். தற்போது அதே விமர்சனத்தை திமுக அரசு மீது அண்ணாமலை வைத்துள்ளார்.

தற்போது திமுக ஆட்சியில் தமிழகத்தில் கமிஷன், கரப்சன் தலை தூக்கி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருநெல்வேலிக்கு வந்திருந்தார். அங்கு புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலகத்தை அண்ணாமலை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இன்னும் அடுத்த மூன்று மாதங்களில் புதிய பாஜக அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளன. நிர்வாக ரீதியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி மாவட்டங்களில் 19 இடங்களில் புதிய கட்சி அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும். ஆனால், தற்போதும் தமிழகத்தில் அடிப்படைவாதிகள் இயங்கி வருகிறார்கள். தமிழகத்தில் காவல்துறை பணியாற்ற தமிழக அரசு அனைத்து வழிகளையும் செய்ய வேண்டும்.

தமிழக அரசு காவல் உதவி ஆய்வாளர்களுக்கு போதிய அதிகாரம் வழங்கவில்லை. இதுவரை பார்த்திராத வகையில் பல்வேறு வழக்குகளை தற்போது தமிழகம் பார்த்து வருகிறது. தமிழகத்தில் எந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் பாஜக தயாராகவே உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பாஜக கட்சியை வளர்க்க ஒரு வாய்ப்பாகவே பார்க்கிறோம். அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என்று நான் சொல்லவில்லை. ஆளுங்கட்சியின் பணப் பலம், படை பலம் எல்லாம் உள்ளது.

தற்போது திமுக ஆட்சியில் தமிழகத்தில் கமிஷன், கரப்சன் தலை தூக்கி வருகிறது. அதிமுகவும் பாஜகவும் கூட்டணி என்ற ஒரே கப்பலில் பயனம் செய்துகொண்டிருக்கிறது. கப்பல் நன்றாக நேராகப் போய்கொண்டிருக்கிறது. அதிமுக -பாஜக கூட்டணியானது திமுக - காங்கிரஸ் கூட்டணியைப் போல இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடலாம். திமுகவுடன் இணைத்துகொண்டால் மக்கள் வாக்களிக்கும் போது சின்னத்தை பார்த்து குழப்பம் இல்லாமலாவது இருப்பார்கள். தமிழக காங்கிரஸுக்கு கட்சியின் தன்மையே இல்லை, திமுகவின் பி - டீம் ஆகத்தான் தமிழக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது” என்று அண்ணாமலை தெரிவித்தார். 

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் என்று வேலை செய்துகொண்டிருக்கிறது அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார். தற்போது அதே விமர்சனத்தை திமுக அரசு மீது அண்ணாமலை வைத்துள்ளார்.