CM palanisamy discuss with officers to handle rain
இன்று முதல் 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து மழை பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக அமைச்சர்கள், ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார்.
வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. தொடங்கியதுமே தொடர்ச்சியாக ஒரு வாரம் கனமழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வடகடலோர மாவட்டங்களிலும் நாகை மற்றும் திருவாரூர் ஆகிய கடலோர டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
இந்த கனமழையால், சென்னையின் நகர்ப்பகுதிகள் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட சென்னை புறநகர்ப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை பாதிப்பை எதிர்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட சென்னையில் 2 சிறுமிகள் திருவாரூரில் விவசாயி என மின்கம்பியை மிதித்து சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன.
சென்னை வந்த பிரதமரிடம் கனமழை பாதிப்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 1500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மழை பாதிப்பை எதிர்கொள்வது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்திவருகிறார்.
தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களும், மழை பாதிப்பை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறை, மின்சாரத்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
ஒருவாரத்திற்கு முன்பு பெய்த கனமழையின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இன்று முதல் கனமழை பெய்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
மீட்பு நடவடிக்கைகள், மின்சாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆனால், கடந்த முறை பெய்த கனமழையால் நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னைக்கு நிகராக பாதிப்புகளை சந்தித்த டெல்டா மாவட்டங்களில் கனமழையை எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தவில்லை.
