ஆளுநரை பார்த்து அஞ்சு நடுங்க ஸ்டாலின் ஒன்னும் எடப்பாடியார் இல்லை.. பீட்டர் அல்போன்ஸ் அதிரடி சரவெடி..!
ஜெயலலிதா முதல்வதாக இருந்தபோது எந்த அதிகாரியும் ஆளுநரை சந்திக்க கூடாது என்று உத்தரவு போட்டார். அரசு அதிகாரிகள் மட்டுமின்றி காவல்துறையில் இருந்தும் எந்த அதிகாரிகளும் ஆளுநரின் அழைப்புக்கு செவிசாய்க்கவில்லை.
ஆளுநர் ரவி தனது வரம்பை மீறினால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயப்பட மாட்டார் என மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
மக்கள் நலனுக்கும், மாநிலத்தின் நலனுக்கும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நலத் திட்டங்களின் நிலை, திட்டங்களின் செயல்பாடு போன்ற தகவல்களையும் அதற்கான ஆவணங்களையும் அரசு துறை செயலாளர்கள் வைத்திருப்பர். இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்களின் நிலை மற்றும் செயல்பாடுகளின் விவரங்களை ஆளுநர் தமிழக தலைமை செயலாளர் இறையன்புவிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து, அனைத்து அரசுத் துறை செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஒவ்வொரு துறை அதிகாரிகளின் தகவலையும் கேட்டிருப்பது என்பது ஏற்க முடியாது என்று மாநில சிறுபான்மை நலவாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- அதிகாரிகளை ஆளுநர் அழைத்து பேசுவது 2 அரசுகள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் ஆளுநர் தலையிட அவசியமில்லை. ஜெயலலிதா முதல்வதாக இருந்தபோது எந்த அதிகாரியும் ஆளுநரை சந்திக்க கூடாது என்று உத்தரவு போட்டார். அரசு அதிகாரிகள் மட்டுமின்றி காவல்துறையில் இருந்தும் எந்த அதிகாரிகளும் ஆளுநரின் அழைப்புக்கு செவிசாய்க்கவில்லை.
அதே சமயம் முந்தைய ஆட்சி காலகட்டத்தில் வலுவற்று கிடந்த அதிமுக அமைச்சர்கள் சிலர் ஆளுநருக்கு வரவேற்பு கம்பளம் விரித்ததை தமிழக மக்கள் கைதட்டி சிரித்தனர். அரசியல் சாசனத்தின்படி ஆளுநருக்கு எந்த அளவுக்கு அதிகாரம் இருக்கிறதோ அதை மதிப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் தயாராக இருப்பார். ஆனால், அதே நேரத்தில் ஆளுநரின் அதிகாரம் வரம்பு மீறினால் அதற்கு எடப்பாடி பழனிசாமியை போல மு.க. ஸ்டாலின் பயப்படமாட்டார். கலைஞர் சொன்னபடி உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கை படிதான் திமுக செல்லும் என தெரிவித்துள்ளார்.