தமிழ் மகனுக்கு விருது..!புறநானூற்று வரிகளை குறிப்பிட்டு முதலமைச்சர் வாழ்த்து…
வீரதீரச் செயலுக்கான உயரிய விருதான வீர் சக்ரா விருது பெற்ற இராணுவ வீரர் அபிநந்தன் வர்த்தமானுக்கு ’என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான் ’எனும் புறநானூற்று வரிகளை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். செருக்களம் சந்தித்துத் தாயகம் காத்த வீரமகன் என்றும் குறிப்பிட்டுள்ளார்
பாகிஸ்தானுக்கு எதிரான துல்லிய தாக்குதலின்போது தீரத்துடன் போராடிய தமிழகத்தைச் சேர்ந்த கமாண்டர் அபிநந்தனுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வீர் சக்ரா விருது வழங்கினார். இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வரும் அபிநந்தன்,தமிழகத்தை சேர்ந்தவர். கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் தீவரவாதிகள் நடத்திய, தற்கொலைப்படை தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட சி.அர்.பி.எப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதற்கு பதிலடியாக துல்லிய தாக்குதல் மூலம் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி, தீவிரவாத முகாம்களை அழித்தன. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி , இந்தியாவுக்குள ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை , கமாண்டர் அபிநந்தன் தனது மிக் 21 ரக போர் விமானத்தில் விரட்டி சென்று சுட்டு வீழ்த்தினார். இந்த தாக்குதலின் போது அபிநந்தன் சென்ற விமானம் பாகிஸ்தான் பகுதிக்குள் வீழ்ந்தது. பின்னர், பாகிஸ்தான் இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட அபிநந்தன், மத்திய அரசின் பலதரப்பட்ட முயற்சிக்கு பின் விடுவிக்கப்பட்டார். உலக நாடுகளும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது அபிநந்தன் விடுவிப்புக்கு ஒரு காரணமாக அமைந்தது.
இதன்பின்னர், பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து, அந்நாட்டின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக விங் கமாண்டர் அபிநந்தன் குழுவிற்கு பாராட்டி விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவரது வீரதீரச் செயல்களை சிறப்பிக்கும் வகையில் அபிநந்தனுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வீர் சக்ரா விருது பெற்ற விங் கமாண்டர் அபிநந்தனை பாராட்டி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில் ‘என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்’என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்துத் தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் வீர் சக்ரா விருது பெற்றதற்குப் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.