Asianet News TamilAsianet News Tamil

தமிழறிஞர்களுக்கு வாரிக் கொடுக்கும் தமிழக அரசு..! பட்டியல் போட்ட எடப்பாடி..!

தமிழ்நாட்டின் எல்லையைக் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட எல்லைக் காவலர்களுக்கு மாதந்தோறும் ரூ.4500/- உதவித் தொகையும், எல்லைக் காவலர்களின் மரபுரிமையர்களுக்கு மாதந்தோறும் ரூ.2500/- உதவித் தொகையும், தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3500/- உதவித் தொகையும், தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000/- உதவித் தொகையும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கும், அவர்களின் மரபுரிமையர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2500/- உதவித் தொகையும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
 

Cm Edapadi greets people for International Mother Language Day
Author
Vellore, First Published Feb 20, 2020, 2:57 PM IST

உலக தாய்மொழி தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியைப் போற்றிப் பாதுகாத்திடும் வகையில் உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ஆம் நாளன்று, தமிழ் மொழியின் சிறப்பை இளைய தலைமுறையினர் அறிந்திடும் விதமாக மாநில அளவில் கவியரங்கம், கருத்தரங்கம் போன்றவை நடத்தப்பட்டு, தமிழக அரசால் உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனைப் பேணிக் காத்திடும் வகையிலும், தமிழ் அமைப்புகள் / சங்கங்களை ஊக்கப்படுத்திட “தமிழ்த்தாய் விருது”, கபிலர், கம்பர், உ.வே.சா., சொல்லின்செல்வர், ஜி.யு.போப், உமறுப்புலவர், இளங்கோவடிகள், சிங்காரவேலர், மறைமலையடிகள், அயோத்திதாசப்பண்டிதர் ஆகியோரின் பெயர்களில் விருதுகள், கணினித் தமிழ் வளர்ச்சிக்காக “முதலமைச்சர் கணினித் தமிழ் விருது”, பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்திட “அம்மா இலக்கிய விருது”, மாவட்டந்தோறும் தமிழ் ஆர்வலர்களுக்கு “தமிழ்ச்செம்மல் விருது” மற்றும் “சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது”, அயல் நாட்டில் வாழும் தமிழறிஞர்களைப் பாராட்டும் வகையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் விருதுகளான இலக்கிய விருது, இலக்கண விருது, மொழியியல் விருது போன்ற பல்வேறு விருதுகளை வழங்கி வருவதோடு, தமிழறிஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தேவநேயப் பாவாணர் விருது, அருள் நிறை காரைக்கால் அம்மையார் விருது, வீரமாமுனிவர் விருது, சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது, சி.பா. ஆதித்தனார் வார இதழ் விருது, சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது ஆகிய புதிய விருதுகளை அறிவித்து, விருதுகளின் எண்ணிக்கையை 72-ஆக உயர்த்தியுள்ளது.

Cm Edapadi greets people for International Mother Language Day

தமிழ் மொழி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்களின் தொண்டினைப் போற்றிடும் வகையில், மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டபொழுது, தமிழ்நாட்டின் எல்லையைக் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட எல்லைக் காவலர்களுக்கு மாதந்தோறும் ரூ.4500/- உதவித் தொகையும், எல்லைக் காவலர்களின் மரபுரிமையர்களுக்கு மாதந்தோறும் ரூ.2500/- உதவித் தொகையும், தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3500/- உதவித் தொகையும், தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000/- உதவித் தொகையும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கும், அவர்களின் மரபுரிமையர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2500/- உதவித் தொகையும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் பயன்பெறும் வகையிலும், தமிழ் மொழியின் தொன்மை, இலக்கியம், இலக்கணம் மற்றும் பண்பாடு தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டு, தமிழ் மொழியின் சிறப்பினை ஆவணப்படுத்தி உலகெங்கும் கொண்டு செல்லவும், ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 10 கோடி ரூபாயும், ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 1 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான 1.11.1956 நாளினை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாட அறிவிக்கப்பட்டுக் கடந்த ஆண்டு 1.11.2019 அன்று மாநில அளவில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது.

Cm Edapadi greets people for International Mother Language Day

உலகத் தாய்மொழி நாளான இந்த இனிய நாளில், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். “தமிழ் என்பது இனத்தையும், நாட்டையும், பண்பாட்டையும் சுட்டிக்காட்டும் உன்னதமான அடையாளம்” என்றார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, அவர்தம் நெறியில் தமிழ் காத்து, தமிழ்நாட்டை வளர்த்து வருகிறது. இந்நன்னாளில் நாம் அனைவரும் விழிபோல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும் என்ற உறுதியோடு அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வோம்.

இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios