பாஜகவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள்  கூட்டம் கூட்டமாக இணைந்து வருவதாக அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் மருத்துவர் டெய்சி சரண் கூறியுள்ளார்.

பாஜகவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து வருவதாக அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் மருத்துவர் டெய்சி சரண் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஜக சிறுபான்மையினர் பிரிவு மூலம் கடந்த 8 ஆண்டு பாஜக ஆட்சியின் சாதனை குறித்து விளக்கம் வகையில் தேசிய தலைவர் ஜமால் சித்திக் சிறுபான்மையின உறுப்பினர்கள் மற்றும் சிறுபான்மை மக்களை நேரில் சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை செம்பாக்கத்தில் உள்ள பாஜகவின் செங்கல்பட்டு மாவட்ட சிறுபான்மையினர் தலைவர் தளவாய் ராஜ் மற்றும் அப்பகுதி மக்களை தேசிய தலைவர் ஜமால் சித்திக் நேரடியாக சந்தித்து பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது மாநில செயலாளர் வினோத் பி.செல்வம் சிறுபான்மையினர் அணியின் மாநில தலைவர் மருத்துவர் டெய்சி சரண் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது கடந்த பாஜக ஆட்சியில் 8 ஆண்டுகால சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளரிடம் பேசிய பாஜக சிறுபான்மையின தலைவர் டெய்ஸி சரண், தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. அதேபோல் மோடி தலைமையிலான கடந்த ஆண்டு பாஜக பல சாதனைகளை படைத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் மோடி தலைமையின்கீழ் மத்திய அரசு செய்த சாதனைகளை சிறுபான்மை இன மக்களிடம் விளக்குவதற்காக தேசிய சிறுபான்மையினர் தலைவர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் சாரைசாரையாக பாஜகவில் இணைந்து வருகின்றனர். இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றியது பாரதிய ஜனதா கட்சிதான், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் நடத்திச் செல்வது பாரதிய ஜனதா கட்சிதான், ஆனால் தமிழகத்தில் பாஜக்குறித்து திமுக பொய்யான மூளைச்சலவை செய்து வருகிறது என்றார். அப்போது எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதில் பிரதமர் வேட்பாளர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் ரயில் நிலையத்தில் டீ விற்பவர் கூட பிரதமர் ஆகலாம் என கூறினார்.

குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறித்தவர்களுக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது என்ற விமர்சனம் நாடு முழுவதும் இருந்து வருகிறது. குறிப்பாக இந்துக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை செய்து வருவதாக பாஜகமீது குற்றச்சாட்டு இருந்து வருகிறது, எனவே இந்த விமர்சனங்களை களைய இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களையும் கட்சியில் இணைத்து பாஜக அனைவருக்குமான கட்சி என்ற பிம்பத்தை உருவாக்க பாஜக முயற்சித்து வருகிறது என்றும் பலர் இதை விமர்சித்து வருகின்றனர்.