#BREAKING இதே பொழப்பா இருக்கீங்க... ராஜேந்திர பாலாஜியால் கடுப்பான சென்னை உயர்நீதிமன்றம்..!
ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் இனி வாய்தா கேட்க கூடாது என்றும் ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாவிட்டால், அடுத்த விசாரணையின் போது இந்த வழக்கில் அரசு தரப்பு வாதங்கள் கேட்கப்படும்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மகேந்திரன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், ராஜேந்திர பாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும் விசாரணையை தொடர வேண்டியதில்லை என்றும், வழக்கை முடிக்க பொது துறை உத்தரவிட்டதாக அறிக்கையில் லஞ்ச ஒழிப்புதுறை தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது. அதாவது, நீதிபதி சத்திய நாராயணன் அளித்த தீர்ப்பில், ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதி ஹேமலதா வாசித்த தீர்ப்பில், நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்குப்பதிவு செய்து விசாரிப்பது இறந்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போல் ஆகும். எனவே மேற்கொண்டு விசாரிப்பதால் எந்தவித பலனும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார்.
கடந்த 5ம் தேதி இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கை இன்று ஒத்திவைத்து இருந்தனர். இதற்கிடையில் 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், வழக்கு விசாரணைக்கு தடைகோரியும் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விதிகளின்படி மாறுபட்ட தீர்ப்பு வழங்கும் போது அதற்குரிய காரணங்களை விளக்கமாக நீதிபதிகள் தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு விளக்கம் அளித்தால் மட்டுமே 3வது நீதிபதி விசாரிக்க முடியும். எனவே இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கூடாது என்ற உள்நோக்கத்துடனேயே பிழைகள் கொண்ட மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டார். எனவே இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
இதையடுத்து ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் இனி வாய்தா கேட்க கூடாது என்றும் ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாவிட்டால், அடுத்த விசாரணையின் போது இந்த வழக்கில் அரசு தரப்பு வாதங்கள் கேட்கப்படும் என்றும் தெரிவித்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.