கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது..!! அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்..!!
கோவிட்-19 க்கு எதிரான பாதுகாப்பிற்கு உதவும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அவர் அனைவரையும் கேட்டுக் கொண்டார். நாட்டில் 12.55 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
covid-19 க்கு எதிரான போராட்டத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா சிறந்த நிலையில் உள்ளது எனவும், ஆனால் மனநிறைவு அடையும் வகையில் இல்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, இந்தியாவில் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 73 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலக அளவில் வைரஸ் பாதித்த நாடுகள் பட்டியலில் இந்தியா 6 வது இடத்தில் உள்ளது.நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் குழுவின் 16வது கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் வழக்கத்துக்கு மாறாக கடந்த ஏழு நாட்களாக வைரஸ் தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டில் தொடர்ச்சியாக 6வது நாளாக 9,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கோவிட்-19 கண்டறிவதற்கான RT-PCR சோதனைகளின் எண்ணிக்கை செவ்வாய் அன்று 5 மில்லியனைத் தாண்டியது என்று ஐசிஎம்ஆர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி வரை 50,30,700 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா சிறந்த நிலையில் உள்ளது, ஆனால் மனநிறைவு அடையும்வகையில் இல்லை என அவர் கூறியுள்ளார். கோவிட்-19 க்கு எதிரான பாதுகாப்பிற்கு உதவும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அவர் அனைவரையும் கேட்டுக் கொண்டார். நாட்டில் 12.55 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஊழியர்கள் சமூக இடைவெளியை மறந்து விடக்கூடாது எனவும் உடல் ரீதியான விலகல், கை சுகாதாரம் மற்றும் முகமூடி அணிதல் போன்றவற்றை கடுமையாக பின்பற்றுவதன் மூலம் இந்த வைரஸை தடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார். இதுவரை 21,494 வென்டிலேட்டர்கள் மருத்துவமனைகளில் உள்ள நிலையில், மேலும் 60,848 வென்டிலேட்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜூன்-9ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 1,67,883 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 21,6 14 ஐசியு படுக்கைகள், 73,469 ஆக்சிஜன் ஆதரவு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கோவிட்-19க்கு பிரத்தியேக சிகிச்சை அளிக்கும் 958 மருத்துவமனைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியஅரசு 128. 48 லட்சம் N-95 முகக் கவசங்கள் மற்றும் 104.74 லட்சம் பிபிஇக்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.