நாயில் சாதி இருக்கும்போது மனிதரில் சாதி இருக்கக் கூடாதா ? சாதி வெறிப் பேச்சுக்கு கண்டனம் !!
நாயிலும் குதிரையிலும் சாதி இருக்கும்போது, மனித இனத்தில் சாதி இருப்பதில் என்ன தவறு என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வெங்கடகிருஷ்ணனை கைது செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் கடந்த ஜூலை 19 முதல் 21 ம் தேதி வரை தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு நடைபெற்றது..
இந்த கூட்டத்தில், பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சனாதன முறையை நியாயப்படுத்தியும், நாயையும் மனிதர்களையும் இணைத்தும் வெங்கடகிருஷ்ணன் என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
நாய்களில், பொம்மரேனியன், லேப்ரேடர் போன்ற பல ஜாதிகள் இருக்கும் போது, மனிதர்களிடம் ஏன் ஜாதி இருக்கக் கூடாது. மனிதர்களில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற முறை இருக்கிறது என்று கூறினால் ஏன் திட்டுகிறார்கள்” என்று சூப்பர் விளக்கம் ஒன்றை கொடுத்தார். அவரது அந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் பெற்றது.
இந்நிலையில், சாதிவெறியோடு கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் பேசிய வெங்கடகிருஷ்ணனை கைது செய்ய வலியுறுத்தி பெரியாரிய கூட்டமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் துறையில் புகார் அளித்தனர்.
வெங்கடகிருஷ்ணனின் பேச்சு சாதி இன மோதல்களை தூண்டும் வகையில் உள்ளது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.