இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழகத்தில் சாதி, மத வெறுப்பு கூடவே கூடாது... வைகோ வலியுறுத்தல்..!
இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கிற முன்னோடி மாநிலமான தமிழகத்தில் எக்காரணத்தைக் கொண்டும், சாதி, மத வெறுப்பு உணர்வு வளர்ந்திடக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவல் நிலைய வட்டம், சோகனூர் கிராமத்தில் நடந்த வன்முறைகளில், அர்ஜூன், சூர்யா ஆகிய இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர் என்பதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இறந்தவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்; காயம் அடைந்தவர்கள் நலம் பெற விழைகிறேன்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இப்படுகொலைகள் நடைபெற்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குற்றம்சாட்டி இருக்கிறது. குற்றவாளிகளைக் காவல் துறையினர் உடனே கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும். தமிழகத்தில் சாதி, மத வெறி மோதல்களுக்கு யாரும் இடம் அளிக்கக் கூடாது. தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும். சமூக நல்லிணக்கம் நிலவ வேண்டும். அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கிற முன்னோடி மாநிலமான தமிழகத்தில் எக்காரணத்தைக் கொண்டும், சாதி, மத வெறுப்பு உணர்வு வளர்ந்திடக் கூடாது.
அத்தகைய நடவடிக்கைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு உடனே நிதி உதவி அளிக்க வேண்டும்” என்று அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.