நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ரத்து.? உச்ச நீதிமன்றம் போக சொன்ன உயர் நீதிமன்றம்.. அடுத்தது என்ன.?
கொரோனா இரண்டாவது அலையுடன் ஒப்பிடும்போது தற்போதைய நிலவரம் மோசமாக இல்லை. வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடலாம்” என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும் 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தப்படுவதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுவதற்கான பணிகள் முடிந்துவிட்டன. மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டும். தேர்தல் தேதி 22-ஆம் தேதியே அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொரோனா மூன்றாம் அலை தீவிரமாகி உள்ள நிலையில், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை மையப்படுத்திதான் தேர்தலை ரத்து செய்யக்கோரி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் இந்த வழக்கை தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், “கொரோனா தொற்று தற்போது உச்சத்தில் இருப்பதால், தேர்தல் நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்டும் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்தபோது, “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தைதான் அணுக வேண்டும். கொரோனா இரண்டாவது அலையுடன் ஒப்பிடும்போது தற்போதைய நிலவரம் மோசமாக இல்லை. வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடலாம்” என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும் 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தப்படுவதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதனயடுத்து வழக்கை நாளை வரை ஒத்தி வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. தமிழகத்தில் நகராட்சித் தேர்தலை நடத்த 4 மாதங்கள் உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்தது, அந்த அவகாசம் ஜனவரி 26 உடன் முடிவடைகிறது. எனவே, அதன் அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடப்பது, அடுத்த இரண்டு நாட்களில் நீதிமன்ற நகர்வுகளைப் பொறுத்து முடிவாகும் எனத் தெரிகிறது.