பிரதமரை மேடையில் வைத்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் இப்படி பேசலாமா? கடுப்பாகும் அண்ணாமலை..!
கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு என்ன தைரியத்தில் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைக்கிறார். கச்சத்தீவை மீட்டுத்தர கோரிக்கை வைக்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது.
தமிழ்நாட்டையும், இந்தியாவையும் பிரதமர் தரம் பிரித்து பார்த்ததில்லை. முன்னுக்கு பின் முரணான தகவலை பேசிவிட்டு திராவிட மாடல் என்கிறார் முதல்வர் என அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை நேற்று துவக்கி வைத்தார். இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மேடையில் இருக்கும் போதே கச்சத்தீவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு அரங்கத்திலும் நல்ல வரவேற்பு இருந்தது. முதல்வர் ஸ்டாலின் பேச்சு குறித்த பல்வேறு விவாதங்களும் தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் பிரதமர் மோடியை டெல்லிக்கு வழியனுப்ப சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஒரு மாநில முதல்வர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு சான்று, தமிழக முதல்வர் நடந்து கொண்ட விதம். பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய அரசியல் நாடகம் தமிழக சரித்திரத்தில் கரும்புள்ளி.
கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு என்ன தைரியத்தில் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைக்கிறார். கச்சத்தீவை மீட்டுத்தர கோரிக்கை வைக்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது. எப்படி ஜிஎஸ்டி கவுன்சில் நடக்கிறது என்பது கூட தெரியாமல், முதல்வர் பேசியது தமிழகத்தை அவமானப்படுத்துவது போலாகிறது. தமிழகத்தையும் இந்தியாவையும் பிரதமர் தரம் பிரித்து பார்த்ததில்லை. முதலமைச்சர் பேசியது அனைத்துமே பொய். முன்னுக்கு பின் முரணான தகவலை பேசிவிட்டு திராவிட மாடல் என்கிறார் என அண்ணாமலை கூறியுள்ளார்.