மகாராஷ்ட்ரா, அரியானாவில் இந்த கட்சிதான் தான் வெற்றி பெறும்….கருத்துக் கணிப்பில் அதிரடி தகவல் !!
மராட்டியம் மற்றும் அரியானாவில் பாரதிய ஜனதா மீண்டும் வெற்றி பெறும் என்று கருத்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா மற்றும் , அரியானா மாநிலங்களில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 24-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த இரு மாநிலங்களிலுமே தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. மராட்டியத்தில் இம்முறை சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தும், அரியானாவில் தனித்தும் பா.ஜனதா போட்டியிடுகிறது.
இந்நிலையில் ஏ.பி.சி. நியூஸ், சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மராட்டியத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு 198 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 76 இடங்கள் வரை கிடைக்கலாம். பிற கட்சிகளுக்கு அதிகபட்சம் 8 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 தொகுதிகளை கொண்ட அரியானாவில் பாஜக 82 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரசுக்கு 3 இடங்களும், பிற கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது..
இதே போல் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் கருத்து கணிப்பிலும் இரு மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி தொடரும் என கூறி உள்ளது. மராட்டியத்தில் பா.ஜனதாவுக்கு 142 முதல் 147 இடங்களும், சிவசேனாவுக்கு 83 முதல் 85 இடங்களும் கிடைக்கும்.
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 48 முதல் 52 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் பா.ஜனதாவுக்கு 58 முதல் 70 இடங்களும், காங்கிரசுக்கு 12 முதல் 15 இடங்களும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு 5 முதல் 8 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டு 122 இடங்களையும், சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றி இருந்தன.
அரியானாவில் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 47 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.