எனக்கு ஏன் அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று கட்சியில் கேட்டால், நான் கனிமொழி ஆதரவாளன் என்கிறார்கள். எனவே, எந்தக் காலத்திலும் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

“வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 30 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் அளவுக்கு மக்களின் மனநிலை இப்போது மாறிவிட்டது” என்று பாஜகவில் இணைந்த திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.

பாஜகவில் திமுக எம்.பி. மகன்

எம்.பி.யும் மாநிலங்களவை திமுக குழு தலைவருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாயின. பாஜகவில் இணைவதை உறுதி செய்த சூர்யா சிவா, இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தும் விளக்கியுள்ளார். “திமுகவில் கடந்த 15 ஆண்டுகளாக இருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக உழைத்த எனக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. திமுக சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது. இதனால், ஏற்கனவே பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவேதான் பாஜகவில் இன்று இணைகிறேன். எனக்கு திமுகவில் அங்கீகாரம் கிடைக்கக் கூடாது என்பதை அப்பா தடுத்தார் என்பது உண்மைதான். 

அங்கீகாரம் கொடுக்காத திமுக

ஆனால், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டியது தலைமையின் கடமை ஆகும். எனக்கு ஏன் அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று கட்சியில் கேட்டால், நான் கனிமொழி ஆதரவாளன் என்கிறார்கள். எனவே, எந்தக் காலத்திலும் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுகவில் பல மாவட்டச் செயலாளர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட்டுகள் வழங்கப்படவில்லை. அதுவே பலருக்கும் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சியில் யாருக்கும் தெரியாத நபர்களுக்கெல்லாம் வாரியம் உள்பட பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்தலில் பாஜக வெல்லும்

திராவிட மாடல் ஆட்சியில்தான் நான் கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனவேதான் அங்கீகாரம் தராமல் உள்ளார்கள். ஆனால், பிராமண பார்வையில் பார்க்கக்கூடிய பாஜகவில் அதுபோன்ற சூழல் இல்லை. நான் பாஜகவில் இணைவதை மூலம் இதை உணரலாம். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 30 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் அளவுக்கு மக்களின் மனநிலை இப்போது மாறிவிட்டது” என்று சூர்யா சிவா தெரிவித்தார்.