புதுச்சேரியில் 30-ல் 6 இடங்களை மட்டுமே பெற்ற கட்சியாக பாஜக இருந்தும் வித்தைகள் மூலம் இப்படி ஒரு விபரீத அரசியலை அரங்கேற்றத் துடிக்கிறார்கள் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியில் முதல்வாரக ரங்கசாமி பொறுப்பேற்ற நிலையில் இன்னும் அமைச்சரவை அமையவில்லை. இந்நிலையில் பாஜகவினர் ஜனநாயகத்தின் முன்வாசல் வழியே வராமல் பின்வாசல் நியமனம் மூலம் 3 பேரை பதவியேற்க வைத்துள்ளனர். இப்போது, துணை முதல்வர் உள்பட மொத்தம் 6 அமைச்சர்களில் 3 அமைச்சர் பதவிகளை எப்படியாவது பெற்று, தங்களிடமே உண்மையான ஆட்சி அதிகாரம் இருக்கும் நிலையை உருவாக்கி, சுதந்திரமாக, செயல்பட முடியாத முதல்வராக ரங்கசாமியை ஆக்கிடும் முயற்சியை பாஜக மேற்கொண்டுள்ளது.
பாஜகவிடம் சரணாகதி அடைவதைத்தவிர வேறு வழியில்லை என்று நெருக்கடியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுத்த முயல்கிறார்கள். புதுச்சேரியில் 30-ல் 6 இடங்களை மட்டுமே பெற்ற கட்சியாக பாஜக இருந்தும் வித்தைகள் மூலம் இப்படி ஒரு விபரீத அரசியலை அரங்கேற்றத் துடிக்கிறார்கள். முதல்வர் ரங்கசாமி, மவுன சாமியாகவே இருந்து இந்த நிலைக்கு உடன்பட்டு, தேர்ந்தெடுத்த ஜனநாயகத்தை வெறும் கேலிக்கூத்தாக்க போகிறாரா அல்லது மக்களின் தீர்ப்பைப் பற்றி கவலைப்படாமல் வண்டி ஓடுகிற வரை ஓடட்டும் என்று அரசியல் நடத்தப்போகிறாரா அல்லது உண்மையான மக்களாட்சியை நடத்தப்போகிறாரா என்பது அரசியல் நோக்கர்களின் மில்லியன் டாலர் கேள்வி” என்று அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.