திமுக எம்பியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. என்ன இப்படி ஆகிடுச்சு.. தர்மசங்கடத்தில் பாஜக
திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்துவிட்டார் என தான் கூறிய கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்துவிட்டார் என தான் கூறிய கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலையின் பேச்சை கண்டித்த ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமியிடம் தனது பேச்சுக்கு வருந்துவதாக அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட டிவிட்டர் வைரலாகி வருகிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசி அண்ணாமலை திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காட்டார் இறைவனடி சேர்ந்து விட்டார் என கூறினார். அவரின் இந்த பேச்சு அங்கிருந்த பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது, திமுக தொண்டர்கள் இதனால் பயங்கர அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி எம்.பி டிவிட்டர் ஒன்று பதிவிட்டார்.
அதில், தனது கொள்ளு பேரன் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டுவிட்டு ஆற்காட்டார் எனது தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார் எங்கள் தலைவர்கள் பற்றி உளறும் பாஜக தலைவர் அண்ணாமலை இன்ற தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். என் தந்தை நலமாக உள்ளார் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது தவறான பேச்சுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிடுள்ள டுவிட்டர் பக்கத்தில் Dr.. உங்களுடைய தந்தையார் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவரின் அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்.
நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்த்திருக்கிறார் என்று சொன்ன கருத்துக்கு வருந்துகிறேன் என பதிவிட்டுள்ளார். அண்ணாமலை ஆதாரங்கள் இல்லாமல் பேசி வருகிறார் என திமுகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் ஆற்காடு வீராசாமி மறைந்துவிட்டார் என அவர் கூறிய கருத்துக்கு அவர் தற்போது பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். இந்நிலையில் எதற்கெடுத்தாலும் எதிர் தரப்பினருடன் மல்லுக் கட்டும் பாஜகவினர் இந்த விவகாரத்தில் செய்வதறியாது கப் சிப் ஆகியுள்ளனர்.