இரு அணிகள் இணைவதில் சிக்கல் கூடாது: தினகரனை டெல்லியில் தங்க வைத்த பாஜக!
இரு அணிகளுக்கும் பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்தாலும், முதல்வர் பதவியும், பொது செயலாளர் பதவியும் பன்னீருக்கே கொடுத்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதே, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்களின் விருப்பமாக உள்ளது.
இருந்தாலும், சென்னையில் இருந்த தினகரன் மறைமுகமாக செய்த சில இடையூறுகளால், எடப்பாடி அணியால் உடனடியாக அந்த முடிவுக்கு வரமுடியவில்லை.
அதனால், இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த வழக்கு விசாரணையை காரணம் காட்டி தினகரனை டெல்லியை விட்டு சில நாட்கள் நகரமுடியாமல் செய்து விட்டால், அணிகள் இணைப்பு சுமூகமாக முடிந்துவிடும் என்று பாஜக நினைத்தது.
அதன் காரணமாகவே, தினகரனிடம் தொடர்ந்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
விசாரணை முடிந்து அவர் சென்னை திரும்புவாரா? அல்லது கைது செய்யப்படுவாரா? என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றே தெரிகிறது.
ஆனாலும், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்றே டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினகரன் கைது செய்யப்பட்டு விட்டால், இங்கு அவரது தாக்கம் ஆட்சியிலோ, கட்சியிலோ கொஞ்சம் கூட இல்லாத அளவுக்கு, நிலை முற்றிலும் மாறிவிடும் என்றே பாஜக எதிர் பார்க்கிறது.
அதை ஒட்டியே அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கும் என்று பாஜகவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.