விநாயகர் சிலை வைக்க கூடாது என்ற அறிவிப்பை தொடர்ந்து திமுக ஆட்சி கலைக்கப்படும் என்று கூறுகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. 

திமுக ஆட்சியை கலைப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது அவர் அரசியலில் அறைவேக்காடு என்பதை காட்டுவதாக உள்ளது என்று ஆர்.எஸ்.பாரதி எம்.பி கடுமையாக சாடியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சேலம் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ’’கொடநாடு வழக்கு சம்பந்தமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடையும் பதற்றம் அவர் குற்றம் செய்தது போல மக்கள் உணர்கின்றனர். வழக்கு முடியும் தருவாயில் மீண்டும் விசாரணை தொடங்கலாம் என்று சட்டத்தில் இடம் இருக்கும் போது, அது கூட தெரியாமல் இருப்பது வேதனை. இது போன்ற வழக்கு ஏற்கனவே பல உள்ளது. 

40 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றம் மிக ஆரோக்கியமான மன்றமாக நடைபெற்று வருகிறது. சட்டமன்றம் தற்போதுதான் சட்டமன்றமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் புது அரசியலை பார்க்கிறேன். ஜனநாயகப்படி சட்டமன்றம் நடைபெற்று வருகிறது. விநாயகர் சிலை வைக்க கூடாது என்ற அறிவிப்பை தொடர்ந்து திமுக ஆட்சி கலைக்கப்படும் என்று கூறுகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.

ஒரு மாநில ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்று சட்டம் உள்ள நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பது அவர் அரசியலில் அறைவேக்காடு என்பதனை காட்டுகிறது. இவருக்கு எப்படி ஐ.பி.எஸ் பணி கொடுத்தார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. பாஜக தலைமை எவ்வளவு அரசியல் அறிவு இல்லாதது என்பதை காட்டுகிறது. கேஸ் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு சர்ச்சைக்குரிய வீடியோ போன்றவற்றை மறைப்பதற்காக விநாயகர் சிலை தொடர்பான கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். திசை திருப்பதற்காகவும், தமிழகத்தில் ஏதாவது பிரச்னை ஏற்படுத்திடவே இதை கையில் எடுத்து உள்ளார்கள்’’என அவர் தெரிவித்தார்.