வேல் யாத்திரைக்கு போட்டியாக வேறு யாத்திரை.. புலியைப் பார்த்து சூடுபோட்டுக்கொண்ட உதயநிதி.. பொன்னார் கிண்டல்..!
தமிழக மக்கள் திமுகவுக்கு அரையடி இடம் கூட தரமாட்டார்கள் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூரில் நடந்த வேல் யாத்திரை நிகழ்ச்சியில் தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “வேல் யாத்திரையை நடத்தக் கூடாது என பலர் எதிர்க்கிறார்கள். வேல் யாத்திரைக்கு எதிராக தடி யாத்திரை நடத்துகிறார்கள். இது ஒன்றும் ஏமாளி தமிழகம் இல்லை. தூய தமிழன் என்றால் பாஜகவில் உள்ளவர்களைத்தான் அப்படிச் சொல்ல முடியும்.
தமிழின துரோகிகள் எல்லோரும் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக வருவார்கள். இந்து என்றால் திருடன் என முன்பு சொன்னவர் கருணாநிதி. மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோயிலில் நெற்றியில் வைத்த திருநீறை அழித்தார். இப்போது கையில் வாங்கிய தீருநீரை வீசிவிட்டு சென்றார். இதற்கெல்லாம் அவர் பதில் சொல்லியாக வேண்டும்.
நாம் வேல் யாத்திரை செல்கிறோம். உதயநிதி ஸ்டாலினோ வேறு யாத்திரை செல்கிறார். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. காவிக்கு அரையடி இடம்கூட கிடையாது என கருணாநிதி சொன்னார். ஆனால், இன்று தமிழக மக்கள் திமுகவுக்கு அரையடி இடம் கூட தரமாட்டார்கள்” என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.