ஆர்.கே. நகரில் டெபாசிட் வாங்கினாலே பெரிய வெற்றிதான்: மனம் திறந்த கங்கை அமரன்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்கினால் கூட, பாஜக வுக்கு பெரிய வெற்றிதான் என்று தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் கங்கை அமரன்.
ஆர்.கே.நகரில் மற்ற கட்சிகளுக்கு முன்பாக பிரச்சாரத்தை தொடங்கியவர் பாஜக வேட்பாளர் கங்கை அமரன்.
பிரச்சாரத்திற்கு போகும் இடங்களில் எல்லாம் பாட்டுப் பாடுகிறார், சிரிக்கிறார், கையைப் பிடித்து வாஞ்சையோடு ஓட்டு கேட்கிறார்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, மதிய நேரத்திலும், ஓய்வு எடுக்காமல் சாப்பிட்ட கையுடன் பிரச்சாரத்தை தொடர்கிறார். தலைமையில் இருந்து நிற்கச் சொன்னார்கள், நிற்கிறேன் என்கிறார் அவர்.
என்னுடைய வேலைகளை நான் சரியாக செய்துகொண்டு இருக்கிறேன். நிச்சயமாக ஜெயிக்க முடியாது என்பது எனக்கும் தெரியும். டெபாசிட் வாங்கினால்கூட பெரிய வெற்றிதான்.
ஆனால் அதுவும்கூட கிடைக்காது என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது. ஆர்.கே.நகர் தொகுதியை இவ்வளவுநாள் சுற்றிவந்ததில் இருந்தே, பாஜக-வுக்கு இங்கே வாக்கு வங்கி இல்லை என்பதை உணரமுடிகிறது.
அப்படியே ஒட்டு விழுந்தாலும் அது கங்கை அமரனுக்காக மக்கள் போட்ட ஓட்டாகத்தான் இருக்கும். ஒட்டு.
நான் போகும் இடங்களில் எல்லாம் கூட்டம் கூடுகிறது. அது கட்சிக்காக வரும் கூட்டம் இல்லை. சினிமாக்காரன் என்கிற வகையில் கூடும் கூட்டம் அது. அது அப்படியே ஓட்டாக மாறாது.
எது எப்படி இருந்தாலும், எனக்கு கொடுத்திருக்கும் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்ற நோக்கில் நான் முழு மூச்சாக சுற்றி வருகிறேன்.
செலவு செய்த, பணத்தையெல்லாம் கொடுத்து விடுகிறோம், வாபஸ் வாங்கி விடுங்கள் என்று கூட சிலர் அன்பாக சொல்லிப் பார்த்தார்கள்.
என்னைப் பார்த்தெல்லாம் பயப்பட வேண்டாம், போய் உங்களுடைய வேலையை பாருங்கள் என்று அவர்களிடம் சொல்லிட்டேன்.
நான் யாருக்கும் போட்டி இல்லை என்று எனக்கே தெரியும். பின்னர் எதற்கு என்னைப் பார்த்து அவர்களுக்கு அச்சம் என்று தெரியவில்லை என்று தமக்கு நெருக்கமான சிலரிடம் அவர் கூறி வருகிறாராம்.
கங்கை அமரன், வழக்கமான அரசியல்வாதி போல பேசாமல், யதார்த்தமாக பேசுகிறார் என்றே அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.