ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக பாஜக அறிவித்துள்ளது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால், அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் போக்கொடி உயர்த்தினார். அவருக்கு 2 அமைச்சர்கள் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். இந்த விவகாரத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சச்சின் பைலட்டோடு சேர்ந்து சதி செய்வதாக அசோக் கெலாட் புகார் கூறினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு 15 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகவும் புகார் கூறினார்.

இதனையடுத்து இரு தரப்பும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதிகளில் தங்க வைத்தன. இந்தப் பிரச்னையால சச்சின் பைலட் காங்கிரஸ் தலைவர் பதவி மற்றும் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தானில் அரசியல் நிலையற்றத்தன்மை நீடித்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சச்சின் பைலட் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது எதிர்கால முதல்வர் என்று தன்னை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை சச்சின் பைலட் வைத்ததாக கூறப்படுகிறது.

