தமிழகத்தில் பின்வாசல் வழியாக நுழையும் எண்ணம் பா.ஜ.கவுக்கு இல்லை - வெங்கையா நாயுடு சுளீர்...
தமிழகத்தில் பின்வாசல் வழியாக நுழையும் எண்ணம் பா.ஜ.கவுக்கு இல்லை என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலையில் ஏராளமான உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது.
அதிமுக கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டு ஒ.பி.எஸ் ஒருபக்கமும் எடப்பாடி மறுபக்கமும் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவின் இந்த அரசியல் பிளவுக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.கவே காரணம் என எதிர்க்கட்சி உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஒ.பி.எஸ்ஸின் பின்னணியில் மத்திய அரசு தான் செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து பன்னீர்செல்வம் தரப்பில் கேட்கையில், எங்கள் பின்னணியில் யாரும் இல்லை எனவும் நாங்கள் தனித்தே செயல்பட்டு வருகிறோம் எனவும் அடித்து கூறுகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பின்வாசல் வழியாக நுழையும் எண்ணம் பா.ஜ.கவுக்கு இல்லை. இங்கு நடைபெற்று வரும் பிரச்சனைகளுக்கு உட்கட்சி விவகாரங்களே காரணம்.
ஜெயலலிதா தொகுத்து வைத்து சென்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்ற பா.ஜ.க உறுதுணையாக துணை நிற்கும். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையிடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.