சென்னை, அப்போலோவில் தங்கி சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க இயக்குநர் பாரதிராஜா இன்று அப்போலோ மருத்துவமனை சென்றார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 30 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றும் அவர் பூரண உடல் நலம் பெற பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தும், மருத்துவமனை சென்று உடல்நலம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி அதிமுக தொண்டர்கள், பிரமுகர்கள், அமைச்சர்கள் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்தியும் வருகின்றனர். தேவாலயங்கள் மற்றும் மசூதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா, முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்போலோ மருத்துவமனை சென்றார். பின்னர், முதலமைச்சர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் உள்ள அதிமுக மூத்த தலைவர்களை சந்தித்த பாரதிராஜா, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
