பென்ஸ் கார் மாதிரி இருக்கும் புது அரசு பேருந்துகள்... அடித்து சொல்கிறார் அமைச்சர்!
பயோ டாய்லெட், படுக்கை, ஏசி, ஜிபிஎஸ், சிசிடிவி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார் கருவி, அருகில் வரும் வாகனங்கள் பற்றிய தகவல்களை டிரைவருக்கு தெரியப்படுத்தும் சென்சார் என பென்ஸ் காரில் உள்ள தொழில்நுட்ப வசதி போன்று புதிய பேருந்துகளில் இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழக போக்குவரத்து கழகத்தில் தனியார் பேருந்துகளை மிஞ்சும் வகையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதற்கட்டமாக 515 புதிய அரசு பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த புதிய பேருந்துகளில் அதி நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன. தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக வரலாற்றில், முதல் முறையாக பயோ டாய்லெட், படுக்கை, குளிர்சாதன வசதியுடன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 14 படுக்கைகள் இடம்பெற்றிருக்கும்.
இந்த பேருந்தில் ஜிபிஎஸ் வசதியும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் அடுத்த நிறுத்தம் குறித்த குரல் அறிவிப்பை கேட்டு விட்டு, பயணிகள் இறங்க தயாராகலாம். அதுமட்டுமல்லாமல் பேருந்து நிறுத்தம் குறித்த டிஜிட்டல் போர்டும் இடம் பெற்றுள்ளது.
சென்சாருடன் கூடிய தானியங்கி கதவுகள், தானியங்கி படிக்கட்டுகள், மாற்று திறனாளிகளுக்கு என பிரத்யேகமான தாழ்தள படிக்கட்டு வசதிகளும் இந்த பேருந்தில் இடம்பெற்றுள்ளன.
அதுமட்டுமல்லாமல் பஸ்களின் முன்புறமும், பின்புறமும் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த சென்சார்கள் மூலமாக அருகில் வரும் வாகனங்கள் குறித்த தகவல் டிரைவருக்கு தெரியப்படுத்தப்படும். டிரைவர் தூங்கினால் எச்சரிக்கை செய்யும் வகையிலான சென்சார் கருவியும் கூட தொலை தூரம் செல்லும் பேருந்தில் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகளின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக தனியார் சொகுசு பேருந்துகளை தூக்கி சாப்பிடுட்டு விடும் வகையில் அதிநவீன சொகுசு வசதிகள் புதிய பேருந்தில் இடம் பெற்றுள்ளன. புதிய பேருந்துகளில் இடம் பெற்றுள்ள நவீன தொழில்நுட்பம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, பென்ஸ் காரில் உள்ள தொழில்நுட்ப வசதியைப் போன்றே புதிய பேருந்துகளில் இருப்பதாக கூறியுள்ளார்.
இத்தனை வசதிகள் கொண்ட புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் வருகை இனி அதிகரிக்கும் என்றும், இதனால் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாய் உயரும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.