பாட்ஷா ஸ்டைலில் நடக்கும் புது கவர்னர்... ! விரைவில் பதவியேற்பு.
ரவி தமிழகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தங்களுக்கு ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும், பாஜகவின் கூட்டணியில் இருக்கும் எங்களுக்கே குடைச்சல் கொடுத்து வந்தவர் அவர் என தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளனர்.
தமிழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி நாகலாந்து விமான நிலையத்திலிருந்து ஹாலிவுட் கதாநாயகனைப் போல கோட் சூட் ஸ்டைலிஷ் கூலிங் கிளாஸ் அணிந்து வீர நடை போட்டு தமிழகத்தை நோக்கி வருவது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆளுநர் ரவி நியமன அறிவிப்பு வந்தது முதல் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு காட்டிவரும் நிலையில்," இதோ தமிழகம் வந்தார் புதிய கவர்னர்" என்ற தலைப்பில் ஆர்.என் ரவியின் கோட் சூட் புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் இதுவரை எந்த ஆளுநருக்கும் இல்லாத எதிர்ப்பு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என் ரவிக்கு எதிராக எழுந்துள்ளது. சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கு எதிரிக்கட்சியான திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு சாமர்த்தியத்திற்கும், சர்ச்சைகளுக்கும் பெயர்போன ஆர்.என் ரவியை தமிழகத்தின் ஆளுநராக நியமனம் செய்ததில் உள்நோக்கம் இருக்கிறது என்ற ஐயப்பாடே இந்த எதிர்ப்புக்கு காரணம்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோகித் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் பல மாவட்டங்களுக்கு அதிரடி சுற்றுப்பயணம் செய்தது தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தினார். அவருக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எடுத்த வலுவான போராட்டத்தால் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதையே அடியோடு நிறுத்திக் கொண்டார் அவர். அதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு வந்த மோடிக்கு திமுகவினர் நடத்திய கருப்புக்கொடி போராட்டம் அதுவரை பாஜகவினர் மத்தியில் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவை எதிரிக்கட்சியாகவே மாற்றியது. இந்நிலையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த நீட் தேர்வு தொடங்கி, புதிய வேளாண் சட்டம் முதல், சிஏஏ என அனைத்துக்கும் திமுக வலுவான எதிர்ப்பு காட்டி வருகிறது. அதேபோல் பாஜகவின் பரம எதிரிகளான காங்கிரஸ், மம்தாவுடன் கைகோர்த்துக் கொண்டு பாஜகவுக்கு எதிராக ஸ்டாலின் செயல்படுவது பாஜகவுக்கு பெரும் மன அழுத்தத்தை உருவாக்கி உள்ளது. பல ஆண்டுகளாக தமிழகத்தில் கால் பதிப்பிப்பதிலும் அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் பெரும் தடைக்கல்லாக திமுக இருந்து வருகிறது.
எனவே திமுகவை எதிர்க்க அல்லது சுவீகரிக்கும் அளவிற்கு ஒரு சக்திவாய்ந்த ஆளுநர் தமிழகத்துக்கு தேவை என்பதை பாஜக இப்போது உணர்ந்திருப்பதாக நம்பப்படுகிறது. அதனால்தான் வீரியமிக்க நாகாஸ் போராட்டத்தில் தண்ணீர் உற்றிய ஸ்ரீ அரவிந்த நாராயணன் ரவி என்ற ஆர்.என். ரவியை தமிழக ஆளுநராக பாஜக தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 1976 ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்குத் தேர்வாகி கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி பின் மத்திய அரசு பணியிலும் உளவுத் துறையிலும் நீண்ட நெடிய அனுபவம் பெற்ற ஆர்.என் ரவி தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அதேபோல் தேசிய அளவில் புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வரும் ஆர்.என் ரவி, நாகலாந்தில் நடைபெற்ற கலவரங்களை ஒடுக்கியதில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார். அப்படிப்பட்ட ஒருவரை தமிழகத்தின் ஆளுநராக நியமித்திருப்பது திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது.
திமுகவின் ஆட்சிக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே முழுக்க முழுக்க காவல்துறையை பின்புலமாகக் கொண்ட ஒருவரை ஆளுநராக நியமித்திருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. இதுமட்டுமின்றி நாகலாந்தில் பாஜகவுடன் இணைந்த கூட்டணி கட்சிதான் தற்போது ஆட்சியில் உள்ளது, ஆனால் ரவி அவர்களுக்கே நெருக்கடி கொடுத்தவர் எனவும், அம்மாநில தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைவர் நாகலாந்தில் இருந்து ரவி தமிழகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தங்களுக்கு ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும், பாஜகவின் கூட்டணியில் இருக்கும் எங்களுக்கே குடைச்சல் கொடுத்து வந்தவர் அவர் என தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளனர். அப்படிப்பட்ட ஒவரை தமிழகத்தில் ஆளுநராக நியமிக்க காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் வாதம் இப்படியிருக்க, தமிழக பாஜக வை சேர்ந்தவர்களோ, ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் நலன் கருதி ஆட்சிக்கு வலு சேர்க்கின்ற ஆளுமை என்றும், எப்போதும் சட்டத்தை மதிப்பவர்கள் போலீஸ்காரர்களை வரவேற்பார்கள், ஆனால் சட்டத்தை மீறுபவர்கள் போலீஸ்காரர்களை கண்டு பயப்படுவார்கள் எனவே தமிழ்நாட்டில் இருப்பவர்கள் ரவியே எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் ஒன்று அரசியல் மற்றொன்று அவரின் வருகையால் ஏற்பட்டிருப்பதாக பயம் எனக் கூறுகின்றனர். அதேபோல இந்தியாவைச் சுற்றி மூன்று முக்கிய நாடுகள் இலங்கை, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவைகள் உள்ளன ஆப்கானிஸ்தானை சேர்ந்த 500 பேருக்கு குறையாத தாலிபன்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து சென்றுள்ளதாக தகவல்கள் வருகிறது, ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியாளர்கள் இந்த செயல்களில் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பதாகவும், இதனை சரி செய்ய வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக மத்திய அரசு கருதுவதால், தமிழ்நாட்டின் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்கான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று தான் ரவி நியமனம் என்றும்தகவல்கள் பரபரக்கின்றன.
அதாவது, கையில் ஆயுதம் எடுக்காமல் எதிரிகளை அடக்கியவர் ரவி என்று கூறும் பாஜகவினர் ரவியின் வருகையை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர். விரைவில் ஆர்.என் ரவி தமிழகம் வருகை தர உள்ள நிலையில் பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ அவர் நாகலாந்திலிருந்து தமிழகம் நோக்கி புறப்படுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஹாலிவுட் கதாநாயகனைப் போல கோட் சூட், கூலிங் கிளாஸ் அணிந்து மிடுக்காக ரவி நடந்து வருவது போன்று அந்த புகைப்படம் உள்ளது. ஏற்கனவே ஆளுநர் ரவியை நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் " தமிழகம் வந்தார் புதிய கவர்னர்" என எதிர்க்கட்சிகளை திகிலூட்டும் வகையில் ரவியின் கோட் சூட் புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் அவர் இன்னும் ஒரு சில தினங்களில் தமிழகம் வர உள்ள நிலையில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.