- Home
- Tamil Nadu News
- விஜய் எனக்கு ஒரு பொருட்டே இல்லை..! விஜய் கொண்டையை இரண்டாக பிளந்த எடப்பாடி பழனிச்சாமி
விஜய் எனக்கு ஒரு பொருட்டே இல்லை..! விஜய் கொண்டையை இரண்டாக பிளந்த எடப்பாடி பழனிச்சாமி
தமிழக அரசியல் களத்தில் யார் பலசாலி, யாரை வீழ்த்த வேண்டும் என்று அதிமுகவுக்கு நன்றாகவே தெரியும், நாங்கள் விஜய்யை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உழைப்பால் முதல்வரானவன் நான்..
இந்தியா டுடே நிறுவனம் சார்பில் சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர். அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயியாக வளர்ந்து கிளைச் செயலாளர், ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து உழைப்பால் முன்னேறி நான் முதல்வரானேன்.
கருணாநிதியின் மகன் என்பதால் ஸ்டாலின் முதல்வரானார்
ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அப்படி கிடையாது. அவர் பிறப்பாலே அரசியல் பின்புலம் கொண்டவர். நானும், ஸ்டாலினும் ஒரே நேரத்தில் தான் சட்டமன்ற உறுப்பனர்களானோம். ஆனால் நாங்கள் இருவரும் கடந்து வந்த பாதை ஒன்று கிடையாது. கருணாநிதியின் மகன் என்பதால் ஸ்டாலின் முதல்வராகி உள்ளார்.
கடன் வாங்கி வைத்துக் கொண்டு வளர்ச்சி என்பதா..?
திராவிட மாடல் ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக 2026 தேர்தலில் திமுக வெற்றிபெற்றுவிடும் என்றும் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பாக நேரடியாக விவாதம் நடத்த பலமுறை அழைப்பு விடுத்துவிட்டேன். ஆனால் தற்போது வரை ஸ்டாலின் விவாதத்திற்கு வரவில்லை.
மேலும் பொருளாதாரத்தில் திமுக ஆட்சியில் 11 விழுக்காடு பெற்று நாட்டிலேயே தமிழகம் தான் வளர்ச்சி அடைந்துள்ளதாக ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அளவுக்கு அதிகமாக கடனை பெற்றுக் கொண்டு அதனை வளர்ச்சி என கணக்கு காட்டுவது பொருத்தமாக இருக்காது. திமுக ஆட்சியில் அளவுக்கு அதிகமான கடன் பெறப்பட்டுள்ளது. இது தான் ஸ்டாலின் மற்றும் திமுக அரசின் சாதனை என்றார்.
தவெக ஒரு பொருட்டே இல்லை..
தொடர்ந்து தமிழக அரசியலில் திமுக, தவெக இடையே தான் போட்டி என விஜய் கூறி வருவது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பழனிசாமி, “தமிழக அரசியல் களத்தில் யார் பலமாக இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். யாரை வீழ்த்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். மேலும் அரசியல் நிலவரம் எங்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கையில் நாங்கள் தமிழக வெற்றி கழகத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அதனால் நாங்கள் அவர்கள் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்காது” என்று பதில் அளித்தார்.

