மனைவியை வேட்பாளராக்கிய பாலகிருஷ்ணா ரெட்டி !! அதிமுக அதகளம் !!
பஸ் மீது கல்வீசித் தாக்கிய வழக்கில் எம்எல்ஏ பதவியை இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது மனைவி ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டியை இடைத் தேர்தலில் வேட்பாளராக களம் இறக்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 1998ம் ஆண்டு பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து பாலகிருஷ்ணா ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவரது எம்எல்ஏ பதவியும் பறிக்கப்பட்டது. அவரது ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே தமிழகத்தில் அமமுகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த 18 தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்டன. மேலும் கருணாநிதி, ஏ.கே.போஸ் ஆகியோர் மரணமடைந்ததால் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்ட்டது.
இதையடுத்து மொத்தம் 21 சட்டமன்ற தொகுதிகள் தமிழகத்தில் காலியாக உள்ளன. இதில் வழக்கு நிலுவையில் இருப்பதால் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் , மீதமுள்ள 18 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் இணைந்து இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த 18 தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் நேற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் ஓசூர் தொகுதியில் பதவி இழந்த பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி ஜோதி களம் இறக்கப்படுகிறார்.
இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நேற்று இரவு வெளியிட்டார்.