சுடுகாட்டில் பிணங்களுடன் படுத்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நூதன போராட்டம்!!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் சுடுகாட்டில் பிணங்களுடன் படுத்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அரசியல் கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், சமூக அமைப்புகள் என பல தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூதன போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 6ம் தேதி திருச்சியில் காவிரி ஆற்று மணலில் உடலை புதைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் சில விவசாயிகள், திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் பிணங்களுடன் படுத்து நூதன போராட்டம் நடத்தினர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி இவ்வாறு நூதன முறையில் விவசாயிகள் போராடினர்.