சட்டப்பேரவை தேர்தல்.. பிரதமர் மோடியுடன் பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் தீவிர ஆலோசனை..!
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர்களுடன் சந்தித்து ஆலோசனை நநடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளர் துஷ்யந்த் குமார், தலைவர் அஸ்வினிகுமார் ஷர்மா, தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.
பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்ற பாஜக மிக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த தேர்தலில் ஷிரோமணி அகாலிதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாஜக இந்த முறை தேர்தலை தனியாக சந்திக்க இருக்கிறது.
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து உட்கட்சி பூசலில் ஈடுபட்டு வருவது பாஜகவுக்கு ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் பாஜக அங்கு வெற்றி பெறுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. ஏனெனில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் பாஜகவுக்கு எதிராக தூண் போல் நின்று வருகின்றனர். வேளாண் சட்டத்தை மத்திய பாஜக அரசு கண்டு கொள்ளாததால் பஞ்சாப்பில் பாஜகவுக்கு எதிராக பிரசாரத்தை விவசாயிகள் தொடங்கி விட்டனர். மேலும், பஞ்சாப்பில் பெருபான்மையாக உள்ள சீக்கியர்கள் வாக்குகளை கவர பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர்களுடன் சந்தித்து ஆலோசனை நநடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளர் துஷ்யந்த் குமார், தலைவர் அஸ்வினிகுமார் ஷர்மா, தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் கலந்து கொண்டுள்ளனர். வரவிருக்கும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல், மாநிலத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம், கர்தார்பூர் வழித்தடம் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த ஆலோசனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் சிரோமணி அகாலிதளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.