“சூடு பிடிக்கும்” ஆர்.கே. நகர் தேர்தல் - நடிகர் விஷால் “அரசியல் என்ட்ரிக்கு”அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமானன அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் மதுசூதனன், தி.மு.க., சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகின்றனர். மேலும் சுயேட்சையாக டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் விஷால், சனிக்கிழமை இரவு அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு, தமிழக அரசியலிலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஷால் அரசியலுக்கு வருவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்ய ஆயத்தமாகியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஷால் ஊடகங்களுக்கு அளித்தபேட்டியில், “ நான் ஆர்.கே. நகர் மக்களின்குரலாக இருக்க விரும்புகிறேன். முழுநேர அரசியல்வாதியாக இருக்கவில்லை. மக்களின் பிரதிநிதியாக இருக்க விரும்புகிறேன். தேர்தலில்போட்டியிட்டு பார்க்கலாம் என்ற துணிச்சலுடன் இருக்கிறேன்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எனக்கு அரசியல் ஊக்கத்துக்கு காரணம். நான் கெஜ்ரிவாலை நேரடியாக பார்த்தது கூட இல்லை. அவர்மக்களின் தலைவராக இருந்து வருகிறார். நான் அரசியல்வாதியாக இருக்கவிரும்பவில்லை, சாமானியமனிதராக இருக்க விரும்புகிறேன் ” எனத்தெரிவித்து இருந்தார்.
நடிகர் விஷாலின் இந்தகருத்துக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வரவேற்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, “அரசியலில் உங்களின் தடம் பல இளைஞர்களை அரசியலில் பங்கேற்க உத்வேகமாக இருக்க உதவும். உங்களை வரவேற்கிறேன். டெல்லி வரும் போது, நிச்சயம் இருவரும் சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.