அர்விந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட்... சர்ச்சையை ஏற்படுத்திய சு.சுவாமி
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், ஒரு நக்சலைட் எனவும் அவருக்கு நான்கு மாநில முதலமைச்சர் என் ஏன் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், இன்று 7-வது நாளாக ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் அமைச்சர்கள் சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் வந்தனர்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அர்விந்த் கெஜ்ரிவாலை சந்திக்க ஆளுநர் மாளிகையிடம் 4 முதலமைச்சர்களும் அனுமதி கேட்டனர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அர்விந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்ற அவர்கள், அவரது மனைவியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இது குறித்து பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட். அவரை ஏன் நான்கு மாநில முதல்வர்களும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். சு.சுவாமியின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.