அப்படி போடு...! எடப்பாடியை சந்திக்கிறார் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ...! எதற்கு தெரியுமா?
விரைவில் முதலமைச்சர் எடப்பாடியை சந்திப்பேன் எனவும் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியாக இது அமையும் எனவும் அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற டிடிவி தினகரனுக்கும் எடப்பாடிக்கும் ஏகாப்பொருத்தம்தான்.
இதனால் டிடிவியை கழட்டிவிட்டு ஒபிஎஸ்சுடன் கைகோர்த்தார் எடப்பாடி. இதனால் எடப்பாடி டீமை விட்டு சில எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் வெளியேறினர்.
இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்து வருபவர் ரத்தினசபாபதி.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் பிரிந்திருந்த போதிலும் எடப்பாடி அணியிலேயே நீடித்தார். இரு அணிகளும் ஒன்றாக இணைந்த பிறகு தொகுதியின் வளர்ச்சி பணிகள் மற்றும் ஒன்றுபட்ட அதிமுகவில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து வந்தார்.
திடீரென எடப்பாடி அணியில் இருந்து டிடிவி அணிக்கு தாவப்போவதாக தகவல் வெளியாகியது. ஆனால் நான் எந்த அணியிலும் இல்லை. இருந்தாலும் சசிகலாவை ஏன் வெளியேற்ற முயற்சிக்கிறார்கள் என டிடிவிக்கு ஆதரவாகவே பேசி வந்தார்.
ஆனால் டிடிவியும் சசியும் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். மேலும் தற்போது இரட்டை இலை தீர்ப்பும் அதற்கு ஏற்றவாறு அமைந்தது.
இதையடுத்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் டிடிவி ஆதரவு எம்.பிக்கள் 3 பேர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், விரைவில் முதலமைச்சர் எடப்பாடியை சந்திப்பேன் எனவும் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியாக இது அமையும் எனவும் அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.