தமிழ்நாடு சட்டமன்ற பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு வெடித்தது. இதனையடுத்து, அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுதத்து, சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் நீக்கப்பட்டனர். பின்னர், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை, ஆழ்வார்பேட்டை, T.T.K. சாலை, கிரவுன் பிளாசா சென்னை அடையார் பார்க் ஹோட்டலில் 17.07.2022 - ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு, கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கழகத்தின் சார்பில், சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவர் மற்றும் துணைச் செயலாளராகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பதவிகளுக்கு, கழக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

துணைத் தலைவர் - R.B.உதயகுமார், M.L.A., திருமங்கலம் தொகுதி முன்னாள் அமைச்சர்

துணைச் செயலாளர்- அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, M.L.A.,போளூர் தொகுதி முன்னாள் அமைச்சர்