இதோ இவரும் சொல்லிட்டாருல்ல ... - விவசாயிகள் மரணம் குறித்த அமைச்சர் பி.தங்கமணியும் சர்ச்சை பேட்டி
வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதாலும் காவிரி நீர் மறுக்கப்பட்டதாலும் தமிழகம் முழுதும் கடும் வறட்சி காரணமாக விவசாயம் பொய்த்து போனது. இதனால் ஏற்ப்பட்ட மன உலைச்சலினால் தமிழகம் முழுதும் விவசாயிகள் நூற்றுக்கணக்கில் உயிரிழந்தனர்.
அதிர்ச்சியால் மாரடைப்பு , தற்கொலை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது.இவர்களுக்கான மாநில அரசின் உடனடி நிவாரண தொகையை தமிழக அரசு வழங்காமல் மத்திய அரசின் நிதியை கைகாட்டி காலந்தாழ்த்தி வருகிறது.
அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக்குழு சென்று மாவட்ட வாரியாக பார்வையிடுகின்றனர். இவ்வாறு செல்லும் அமைச்சர்கள் விவசாயிகளின் வேதனைகளை கண்கொண்டு பாராமல் பேட்டி அளிப்பது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அமைச்சர் எம்.சி.சம்பத் , வெல்லமண்டி நடராஜன் போன்றோர் விவசாயிகள் யாரும் வறட்சி காரணமாக உயிரிழக்கவில்லை என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினர். அதற்கு தமிழகம் முழுதும் கண்டனம் எழுந்தது.
இன்று காலை அமைச்சர் துரைக்கண்ணு எந்த அமைச்சரும் அப்படி பேசவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது பேட்டி முடிந்த சில மணி நேரத்திற்குள் நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி மீண்டும் சர்ச்சைக்குரிய பேட்டியை கொடுத்துள்ளார்.
அவரது பேட்டியில் தமிழகத்தில் விசாயிகள் தற்கொலை என்பது ஏதும் இல்லை அதே போன்று விவசாயிகள் மரணம் என்பதும் அரசிலாக்கப்படும் விஷயமாக இருக்கிறது விவசாயம் பாதுப்பு குறித்து சர்வே நடந்து வருகிறது முழுமயான தகவலுக்கு பிறகுதான் அது குறித்து தகவலை தமிழக அரசு தெரிவிக்கும். நாமக்கல்லில் எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
அமைச்சர் பி.தங்கமணியின் பேட்டி மீண்டும் எரிகிற தீயில் எண்ணெயையை ஊற்றியுள்ளது.