தனித்துப் போட்டியிட்டாலும் பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.. புதிய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டாலும் 25 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதிய நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹாட்ரிக் வெற்றி பெற பாஜக திட்டம்
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கடந்த 2014 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் வெற்றி நாடுமுழுவதும் எதிரொலித்ததன் காரணமாக தற்போது 18 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. இதில் அடுத்த கட்டமாக 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை உடனடியாக துவக்குமாறு மாநில தலைமைக்கு பாஜக உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் எம்.பிக்களை பெற வேண்டும் என கூறியுள்ளது. இந்தநிலையில் இதற்கான பணிகளை தமிழக பாஜகவும் தொடங்கியுள்ளது.
புதிய நிர்வாகிகளை நியமித்த பாஜக
சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு தமிழகத்தின் 3 வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக பாஜக மாநில தலைவர் கூறிவருகிறார். இந்த உற்சாகத்தோடு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக செயல்படாத மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என கூறியிருந்தனர். அதன் படி கடந்த வாரம் புதிதாக 50க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்களையும், மாநில நிர்வாகிகளையும் தமிழக பாஜக நியமித்துள்ளது. இந்தநிலையில் புதிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆலோசனைகளை புதிய நிர்வாகிகளுக்கு பாஜக மூத்த தலைவர்கள் வழங்கினார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதி இலக்கு
குறிப்பாக மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் கேட்டுக்கொண்டனர். மேலும் பாஜகவில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான முடிவை மத்திய பாஜக முடிவு செய்யும் என கூறினார். கூட்டணி இல்லையென்றாலும் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழக்தில் மற்ற கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்திப்பதாக தெரிவித்தவர், பாஜகவினர் மக்களோடு இருந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனவும் அதற்காக புதிய நிர்வாகிகள் தீவிர பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.