தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்..!
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக்கப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழக பாஜக தலைவராக இருந்துவந்த எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் எல்.முருகன்.
பாஜகவை பொறுத்தவரை ஒருவருக்கு ஒற்றை பதவிதான் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு செயல்படும் கட்சி. எனவே எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக்கப்பட்டதையடுத்து, அவர் வகித்துவந்த தமிழக பாஜக தலைவர் பதவி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்த்த அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக பாஜகவில் இணைந்தார். 10 ஆண்டுகளாக இந்திய காவல் பணி அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, பாஜகவில் இணைந்து அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.