மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு 5ல்1 பங்கிற்கும் குறைவாக இழப்பீடு வழங்குவதா.? அன்புமணி ஆவேசம்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள இழப்பீடு ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக வழங்கப்பட்டுள்ளதாக அன்புமணி விமர்சித்துள்ளார்.

மழையால் பயிர்கள் பாதிப்பு
டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் சேதமான பயிர்களுக்கு நிவாரணமாக, ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட பாமக தலைவர் அன்புமணி, காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிபந்தனைக்குட்பட்டு ஏக்கருக்கு ரூ.8000, பயறு வகைகளுக்கு ரூ.1200 இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கான இழப்பீடு அதன் உரச் செலவுகளுக்கும், பயறுக்கான இழப்பீடு விதை செலவுகளுக்கும் கூட போதாது! ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்வதற்கு ரூ.46,635 செலவாகும் என தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வேளாண் பல்கலைக்கழகமே மதிப்பீடு செய்துள்ள நிலையில்,
ஏக்கருக்கு 50ஆயிரம் வழங்கிடுக
அதில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக இழப்பீடு வழங்குவது நியாயமல்ல. இதனால் உழவர்களுக்கு பயனில்லை! 33%க்கும் கூடுதலாக மகசூல் இழப்பு ஏற்பட்ட நெற்பயிர்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது அநீதி. பேரிடர் மேலாண்மை விதிகள் தான் இந்த அநீதிக்கு காரணம் என்றால் அவற்றை திருத்தியமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிபந்தனையின்றி ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ.50,000 வீதமும், பயறு வகைகள் மற்றும் உளுந்துக்கு ஏக்கருக்கு ரூ.15,000 வீதமும் இழப்பீடு வழங்க வேண்டும். அதன் மூலம் காவிரி பாசன பகுதி உழவர்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்! என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்