ஜெ. மகள் எனக் கூறும் அம்ருதா ஒரு மோசடி பேர்வழி! இதற்காகத்தான் அவர் அப்படி சொல்லிகிட்டு திரிகிறார்! - ஜெ.தீபா
ஜெயலலிதாவின் மகள் என்று கூறும் அம்ருதா ஒரு மோசடி பேர்வழி என்று ஜெ.வின் அண்ணன் மகள் ஜெ.தீபா, உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரி என உரிமை கோரி, பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற இளம் பெண் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்ருதா, நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாடியதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். அது தொடர்பாக சென்னை அல்லது பெங்களூரு நீதிமன்றத்தை நாடுமாறும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
அதன்படி, அம்ருதா மற்றும் ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தாங்கள் ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர்கள் எனவும், ஜெயலலிதாவை வைஷ்ணவ முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும், ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் வாரிசு என கோரும் வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் டி.என்.ஏ. பரிதனை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஜெயலலிதாவுக்கு சைலஜா என்ற சகோதரி கிடையாது என்று உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தார். தமது பாடடி சந்தியாவுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா மட்டுமே வாரிசுகள் என்று தீபக் பதில்மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வகையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், தீபக்கின் சகோதரியுமான ஜெ.தீபா இன்று உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் வழக்கில் அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அம்ருதா என்பவர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறுவது சொத்துக்காகத்தான். அம்ருதா மோசடி பேர் வழி என்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.