Amarinder Singh : பஞ்சாபில் காங்கிரஸுக்கு ஆப்பு… பிஜேபி கூட்டணியை உறுதி செய்த அம்ரிந்தர்!!
அமைச்சரும், பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளருமான கஜேந்திர சிங் ஷெகாவத்தை பஞ்சாப் லோக் காங்கிரஸ் நிறுவனர் அமரீந்தர் சிங் சந்தித்துள்ளார். இதன் மூலம் அமரீந்தர் சிங் பாஜகவுடனான கூட்டணியை உறுதி செய்துள்ளார்.
அமைச்சரும், பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளருமான கஜேந்திர சிங் ஷெகாவத்தை பஞ்சாப் லோக் காங்கிரஸ் நிறுவனர் அமரீந்தர் சிங் சந்தித்துள்ளார். இதன் மூலம் அமரீந்தர் சிங் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்ற வதந்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இவருக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை கட்சி மேலிடம் நியமித்தது. அடுத்த சில மாதங்களிலேயே முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக முதன்முறையாக தலித் சமூகத்தை சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். சித்துவின் ஆதரவாளராக அறியப்படும் அவரது தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது. பஞ்சாபில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில காங்கிரசில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்நிலையில், அமரீந்தர் சிங், டெல்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு, அமித்ஷாவுடன் சந்திப்பு என பாஜக வட்டாரத்தில் தொடர்ந்து சந்திப்புகளை நடத்தி வந்தார். அதுக்குறித்து பேசிய அவர், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, பஞ்சாப் லோக் காங்கிரஸ் போட்டியிடும்.
இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். பாஜக மட்டுமல்லாமல் கூட்டணியில் இணையும் அகாலி தளம், சம்யுக்த் கட்சியுடனும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க உள்ளோம். இப்போதைக்கு வேறு எதையும் என்னால் கூற முடியாது. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கூட்டணி கட்சிகள் சேர்ந்து முடிவு எடுக்கும் என்று கூறியிருந்தார். இதற்கிடையே இன்று பஞ்சாப் சிஸ்வானில் உள்ள மொஹிந்தர் பாக் என்ற இடத்தில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் நிறுவனர் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சரும், பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளருமான கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துள்ளார். இதன் மூலம் பாஜகவுடனான கூட்டணியை உறுதி செய்திருக்கிறார் அமரீந்தர் சிங்.