கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து: தமிழக முதலமைச்சர் எடப்பாடியார் அதிரடி சரவெடி
பல்கலைக்கழக மானியக்குழு (UGC)மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கொரோனா எதிரொலி காரணமாக , இந்தாண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பு, மற்றும் பலவகை தொழில் நுட்ப, பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதி வழங்கி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-
கொரோனா நோய் தொற்று காரணமாக, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக்குழு (UGC)மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE)ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கி முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் பலவகை தொழில் நுட்பக் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும், முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல நான் 23.7.2020 அன்று உத்தரவிட்டிருந்தேன்.
அதன் அடிப்படையில், உயர்கல்வித்துறை 27.7.2020 அன்று விரிவான வழிகாட்டுதல்களை வழங்கி அரசாணை வெளியிட்டது. தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC)மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும். இது குறித்து விரிவான ஒரு அரசாணையை வெளியிட உயர்கல்வித் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.