விஸ்வாசம் பட டிக்கெட்டுக்காக தமிழிசை முன் பாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்... அடிச்சுத்தூக்கிய பரபர பின்னணி!
விஸ்வாசம் பட டிக்கெட்டை பாஜக பிரமுகர் வாங்கிக் கொடுத்ததால் தமிழிசை கலந்து கொண்ட விழாவில் பங்கேற்றதாக அஜித் ரசிகர் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஸ்வாசம் பட டிக்கெட்டை பாஜக பிரமுகர் வாங்கிக் கொடுத்ததால் தமிழிசை கலந்து கொண்ட விழாவில் பங்கேற்றதாக அஜித் ரசிகர் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை முன்னிலையில் அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியாகின. அப்போது பேசிய தமிழிசை, ‘’தமிழகத்தில் தாமரை மலர அஜித் ரசிகர்கள் உதவ வேண்டும். மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டது வைரலாக பரவியது. இதனால் அதிர்ச்சியான அஜித் 8 ஆண்டுகளுக்கு பின் அதிரடியாக அறிக்கை வெளியிட்டார்.
அதில், ’’நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்து திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன். என் ரசிகர்கள் மீதும், ரசிகர்கள் இயக்கங்களின் மீது எந்தவிதமான அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என்று நான் சிந்தித்ததின் சீரிய முடிவு தான் அது’’ என அஜித் தெரிவித்து இருந்தார்.
திருப்பூரில் பி.ஜே.பி-யில் தங்களை இணைத்துக்கொண்ட `தல' ரசிகர்கள் ஹரி அஜித் ஒரு வாட்ஸ்அப் ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் ``நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்தும் திருப்பூரில் ஒரு குறிப்பிட்ட தனியார் திரையரங்கில் அஜித் படத்தின் ரசிகர் சிறப்புக் காட்சியை எங்களால் வாங்க முடியவில்லை. ஆனால், இந்தமுறை பாஜகவை சேர்ந்த நெருங்கிய நண்பர் மோதிலால் உதவியால், அந்தத் திரையரங்கில் `விஸ்வாசம்' படத்தின் ரசிகர் சிறப்புக் காட்சியைப் பெற்றோம். எனவே, அவர் நடத்திய பாஜக கூட்டத்துக்குத் தனிப்பட்ட முறையில் நான் கலந்துகொண்டேன்.
செல்வாக்கைப் பயன்படுத்திக்கொள்ள நான் நினைக்கவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான் அப்துல்கலாம் லட்சிய இந்தியக் கட்சி சார்பில் திருப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டேன். அப்போதுகூட, அஜித் ரசிகர் என்ற பெயரை பயன்படுத்திக்கொள்ளவில்லை. தமிழிசை கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு என்னை வருமாறு மோதிலால் அழைத்திருந்தார். எனவே, நட்பு அடிப்படையில் நான் ஒரு விருந்தினராக மட்டுமே அந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன். பி.ஜே.பி-யில் இணைந்துவிட்டோம் என்பது தவறான தகவல்" என அவர் தெரிவித்துள்ளார்.