ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ ராஜினாமா? அதிர்ச்சியில் அதிமுக...
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ.வுமான சண்முகநாதன் அவரது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ.வுமான சண்முகநாதன் அவரது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கட்சியை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்கள் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கின்றனர் என சண்முகநாதன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இதனால் அதிமுகவின் உட்கட்சி பூசல் வெளிச்சத்துக்கு வந்தது.
தூத்துக்குடி, மேலூர் கூட்டுறவு வங்கி தேர்தல் 2 முறை ஒத்திவைக்கப்பட்டு நேற்று முன்தினம் நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆதரவாளர்கள் ஒரு தரப்பாகவும், மற்றொரு தரப்பு முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் ஆதரவாளர்கள் போட்டியிட்டனர். இதில், சண்முகநாதன் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களை, மாவட்ட செயலர் செல்லப்பாண்டியன் அணியினர் கடத்த துவங்கி உள்ளதாக, சண்முகநாதன் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக சண்முகநாதன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும், ஆட்சியை நடத்துவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். ஆனால், கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
துாத்துக்குடியில், அமைச்சர், மாவட்டச் செயலர், அமைப்பு செயலர் ஆகியோர், பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். மேலும் கட்சியை வலுப்படுத்தும் எண்ணம், துளியும் இல்லை. தளவாய் சுந்தரமும், மனோஜ் பாண்டியனும் ஆகியோர் அ.தி.மு.க.,வை அழிவு பாதைக்கு கொண்டு செல்கின்றனர் என கூறினார். இதனால் அதிமுகவின் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சண்முகநாதன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.