அதிமுக எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் வெற்றிக்கு ஆப்பு... திமுக வேட்பாளர் தடாலடி முடிவு..!
விராலிமலையில் அதிமுகவின் விஜயபாஸ்கர் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி திமுக வேட்பாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விராலிமலையில் அதிமுகவின் விஜயபாஸ்கர் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி திமுக வேட்பாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் விஜயபாஸ்கரும், திமுக சார்பில் பழனியப்பனும் போட்டியிட்டனர். இதில், விஜயபாஸ்கர் 23,644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
பழனியப்பன் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த மனுவில், வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவற்றை விநியோகித்து முறைகேடுகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். மேலும் வாக்காளர்களைக் கவர விஜயபாஸ்கர் தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததைவிட அதிகமாகச் செலவு செய்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டுக் கருவிகளில் முறைகேடு செய்து விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளார். எனவே அவரது வெற்றியைச் செல்லாது என்று அறிவித்து தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.