கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக முக்கிய பிரமுகரை தட்டி தூக்கிய பாஜக... அதிர்ச்சியில் எடப்பாடியார்..!
அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் முன்னாள் மாநில செயலாளர் மற்றும் கரூர் முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பாஜகவில் இணைந்த சம்பவம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் முன்னாள் மாநில செயலாளர் மற்றும் கரூர் முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பாஜகவில் இணைந்த சம்பவம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அதிமுக கட்சியில் முக்கிய செயலாளர்களில் ஒருவரான வி.வி. செந்தில்நாதன், கடந்த 2011ம் ஆண்டு பொதுத்தேர்தல் மற்றும் 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் என இரு தேர்தல்களில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதில், அதிமுக கட்சியில் இருந்து திமுகவிற்கு தாவிய செந்தில்பாலாஜி, ஏற்கனவே அதிமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். பின்னர், டி.டி.வி. தினகரன் அணிக்கு தாவிய காரணத்தால் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிட்டார். ஆனால் திமுக சார்பில் மீண்டும் களமிறங்கிய செந்தில் பாலாஜி பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தத் தேர்தலிலும் செந்தில்நாதன் தோல்வியை தழுவவே, இவரிடம் இருந்த கரூர் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பதவி பறிக்கப்பட்டு போக்குவரத்து துறை அமைச்சரின் ஆதரவாளருக்கு கொடுக்கப்பட்டது. மேலும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் செந்தில்நாதன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். இதனால், கட்சி பணியில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். இதை சரியாக பயன்படுத்தி பாஜக செந்தில் நாதனுக்கு துண்டில் போட்டது.
இந்நிலையில், அதிமுக இளைஞர், இளம்பெண் பாசறையின் கரூர் முன்னாள் மாவட்ட செயலாளர் வி.வி.செந்தில் நாதன் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் வரவேற்று சால்வை அணிவித்தனர். தொடர்ந்து பாஜக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, அண்ணாமலை, மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர், நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே பாஜக சமீப காலமாக தங்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்களை இணைத்து வருவது முதல்வர் எடப்பாடியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.