அதிமுக யார் பிடியிலும் இல்லை. பாஜக அதிமுகவின் பிரதான கட்சி, அவ்வளவுதான்.. அமைச்சர் அதிரடி விளக்கம்.
கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும், அதிமுக யார் பிடியிலும் இல்லை, அன்புப் பிடியில் இருக்கலாமே தவிர மற்றவர்களின் பிடியில் இருக்காது, கொள்கை வேறு கூட்டணி வேறு
கடந்த முறை இருந்த அதே கூட்டணி, வெற்றி கூட்டணியாக அமைந்து வருகிறது எனவும், அதில் பிரதான கட்சியாக பாரதிய ஜனதா உள்ளது எனவும் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதி திருவேற்காடு நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இது வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும் எந்த மாற்று கருத்தும் இல்லை என்றார்.
அதிமிக பொதுச் செயலாளர் யார் என்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதே என செய்தியாளர்களை கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் என்று தீர்மானம் நிறைவேற்றி அறிவித்ததை சுப்ரீம் கோர்ட் அதரித்த பிறகு உயர் நீதிமன்றத்தில் சென்று வழக்கு தொடர்ந்தாலும் முறையற்றது என்று நாங்கள் நினைக்கிறோம் என்றார். எங்கள் கூட்டணி நல்ல கூட்டணி, கடந்த முறை இருந்து அதே கூட்டணி, வெற்றி கூட்டணியாக அமைந்து வருகிறது என்றார்.
கூட்டணிக்கு தலைமை அதிமுகவா அல்லது பாஜகவா என செய்தியார்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அவர், அதிமுக கூட்டணியின் பிரதான கட்சியாக பாரதிய ஜனதா உள்ளது. ஆனால் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும், அதிமுக யார் பிடியிலும் இல்லை, அன்புப் பிடியில் இருக்கலாமே தவிர மற்றவர்களின் பிடியில் இருக்காது, கொள்கை வேறு கூட்டணி வேறு, நாங்கள் மத்திய மாநில அரசுகளின் சாதனைகளை கூறி வீதி வீதியாக சென்று வாக்கு கேட்போம். கூட்டணி அறிவித்த பின்னரே யாருக்கு எத்தனை சீட்டு என்பது வெகு விரைவில் அறிவிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.