பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு.!முடிவு எடுக்க காலம் தாழ்த்தும் காவல்துறை..? நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அதிமுக
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு மோதிக்கொண்டுள்ள நிலையில், வருகிற 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இபிஎஸ் தரப்பு ஒற்றை தலைமை தொடர்பாக தனி தீர்மானம் கொண்டு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதற்க்கு ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது. ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வந்தால் பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க நேரிடும் என ஓபிஎஸ் தரப்பு எச்சரித்துள்ளது. எனவே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பிரச்சனைகள் எழும் நிலை உருவாகியுள்ளது.ஏற்கனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டு தரப்பினரும் போட்டி முழக்கங்கள் எழுப்பியதால் பதற்றம் உருவானது. மேலும் இபிஎஸ் ஆதரவாளர் மீது தாக்குதல் சம்பவமும் நடைபெற்றது. இந்தநிலையில் முன்னாள் அமைச்சரும் , திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பி.பெஞ்சமின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், வரும் 23ம் தேதி வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள். கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என 2,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், இதனால் இந்த கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அவசியம் எனவும், போக்குவரத்தும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலம் தாழ்த்தும் காவல்துறை
எனவே பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி ஜூன் 7ஆம் தேதி தமிழக டி.ஜி.பி., ஆவடி மாநகர காவல் ஆணையர், திருவேற்காடு காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் விண்ணப்பித்ததாகவும், அதன் மீது எந்த முடிவு எடுக்காததால் மீண்டும் ஜூன்15ம் தேதி நினைவூட்டு கடிதம் அனுப்பிய பின்னர், விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்காமல், காவல்துறை காலம் தாழ்த்துவதாகவும் மனுவில் குறிபிடப்பட்டுள்ளது. எனவே ஜூன் 23ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு தமிழக டி.ஜி.பி., ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதி என். சதீஷ்குமாரிடம் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த மனு வரும் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்